'

2021 உயர்தர பரீட்சை கால அட்டவணைக்கு எதிராக மனு



க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில், பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள பரீட்சை கால அட்டவணையை நடைமுறைப்படுத்துவதை கைவிட உத்தரவு பிறப்பிக்கும் படி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வினிவித முன்னனியின் செயலாளர் நாகானந்த கொடிதுவக்கினால் இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர 2021 பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சை ஆணையாளர் நாயகம், தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் என்போர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாவது, கொவிட் நிலைமைகளில் நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாடத்திட்டங்களை முறையாக நிறைவு செய்வதற்கு முடியாமற் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அதற்காக உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் 20 வார காலம் வழங்கப்படல் வேண்டும் என தேசிய கல்வி நிறுவகத்தினால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதும் , கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அதனை நிராகரித்துள்ளனர் எனபதனையும் சுட்டிக் காட்டியுள்ளார்

எனவே மேற்படி பரீட்சைக்கு முன்னர் மாணவர்களுக்கு 20 வார கால அவகாசம் வழங்க கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் மூலம்  : ADA DERANA