'

7 நாள் வீட்டுத் தனிமைப்படுத்தல் போதுமானது

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்துப்படி , கொவிட் தொற்றுக்குள்ளானவர் 7 நாட்கள் வீட்டில் இருப்பது போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல் வழிகாட்டல்களின் புதிய சீர்திருத்தத்திற்கு அமைவாக கொவிட் நோயாளி ஒருவர் 7 நாட்கள் வீட்டில் இருப்பதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 நாட்களுக்கு பின்னர் குறித்த நபர் வேலைக்கு செல்லலாம் என்றும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி கருத்தை தெரிவித்தார்

ஆரம்ப காலத்தில் கொவிட் நோய் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பது குறித்து தௌிவுகள் இருக்கவில்லை எனவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய 14 நாட்களுக்கு கொவிட் நோயாளி தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டி இருந்ததையும் நினைவுபடுத்தினார். 10 நாட்களுக்கு மேல் பரவலுக்கான சந்தரப்பங்கள் மிகக்குறைவு எனவும் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் ஆரம்ப காலத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டி இருந்ததாகவும், அதன் பின்னர் பீசிஆர் பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்டதாகவும் நினைவுறுத்தினார். எனினும் தற்போது அறியப்பட்டுள்ள வகையில் 5 நாட்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும் 2 நாட்கள் வீட்டில் இருந்ததன் பின்னர் வேலைக்கு திரும்பும் வகையில் சுகாதார வழிகாட்டல்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.